நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே பொறுப்பு என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.அடிகல, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் ஆகியோரினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோர் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த போதே ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்மனுதாரர்களுக்கு நீதிமன்றக் கட்டணமாக ரூ.1.50,000 செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.