Site icon Pagetamil

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை பதவிவிலக கோரும் தீர்மானம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகாரம்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை வெளியேற்றுவதற்கான பிரேரணை இன்று (9) பிற்பகல் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த பிரேரணையை முன்மொழிந்ததுடன், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை வழிமொழிந்தார்.

தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று பகல் முழுவதும் இடம்பெற்றதுடன், விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேசினர்.

குறித்த தீர்மானம் மாலை பரிசீலிக்கப்பட்ட போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

விவாதத்தின் இறுதியில், கிரிக்கெட் விவகாரத்தையொட்டி சபையில் நீதித்துறையை அசௌகரியப்படுத்தும் விடயங்கள் பேசப்பட்டதாகவும், அதற்காக மனவருத்தம் தெரிவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சி பிரதம கொரடா எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சபைக்குள்ளும், வெளியிலும் பேச முடியும் எனவும், தீர்ப்பு பற்றியே பேசப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தீர்மானம் ஏகமதாக நிறைவேற்றப்படுகிறதா என சபாநாயகர் கேட்ட போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்கெடுப்பு நடத்தக் கோரி தொடர்ந்து குரல் எழுப்பினர். சபையில் உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முதலில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

ஆளுங்கட்சி பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க, தீர்மானத்தை ஆளுந்தரப்பு வழிமொழிந்துள்ளதால், வாக்கெடுப்பு அவசியமில்லையெனவும், ஆளுந்தரப்பும் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இந்த தீர்மானம் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்
பார்க்க முடிந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விவாதத்தில் பதில் உரையை நிகழ்த்தியிருந்தார்.

இந்த பிரேரணையை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version