புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த எச்.எம்.அயோத்தியா தேஷானி விஜேவர்தன என்ற இருபது வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (27) இந்த சம்பவம் நடந்தது.
உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 26ஆம் திகதி இரவு புத்தளத்திற்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திருமண நிகழ்வில் இறைச்சி வகைகளை உண்ட பின்னர் யுவதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வாமை ஏற்பட்ட யுவதி ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் போது, மரணம் தொடர்பில் பகிரங்க தீர்ப்பு வழங்கிய புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி குலேந்திர பிரேமதாச, மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைக்காக உடல் உறுப்புகளையும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தார்.
