கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்லாமிய போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் காணாமல் போன அனுலா ஜயதிலக்க உயிரிழந்தமை இன்று (17) உறுதிப்படுத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
சடலம் அடையாளம் காணப்பட்ட இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேல் பொலிஸார் அனுலா ஜயதிலகவின் சடலத்தை தூதரகத்திடம் ஒப்படைப்பார்கள் எனவும் இறுதி மரியாதை மற்றும் சமய சடங்குகள் பற்றிய தகவல்கள் மிக விரைவில் கிடைக்கும் எனவும் பண்டார தெரிவித்தார்.
இறுதிக் கிரியைகளின் பின்னர் அனுலா ஜயதிலகவின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தூதுவர் பண்டார தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இஸ்லாமிய போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட குழுவில் இலங்கையர்களும் உள்ளனர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பண்டார தெரிவித்தார்.
ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக எல்லையைக் கடந்ததாக இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதுடன், பாலஸ்தீன பகுதிகளில் இருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலங்கையர்களை வெளியேற்ற பாலஸ்தீன பிரதிநிதி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.