கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கு சட்டங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதையும் குறிப்பிட்டு, இலங்கையில் பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இணை அனுசரணை நாடுகள்.
கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி, மொண்டெனேகுரோ, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இணை அனுசரணை நாடுகள், காணிப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை முக்கியமான அண்மைக்கால கடப்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
“இந்த அர்ப்பணிப்புகளை அர்த்தமுள்ள செயலாக மாற்றவும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளை வழங்கவும் இலங்கையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது” என ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54வது அமர்வின் போது இணை அனுசரணை நாடுகள் தெரிவித்துள்ளன.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான தயாரிப்புகளை இணை அனுசரணை நாடுகள் குறிப்பிட்டதுடன், சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், நிலைமாறுகால நீதியை முன்னெடுப்பதற்கும் எந்தவொரு பொறிமுறையையும் நிறுவுவதில் உள்ளடங்கிய பங்கேற்பு செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின.
“சிவில் சமூகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் எதிர்ப்பை அடக்குவதற்கு சட்டங்களை தன்னிச்சையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று மேலும் கூறியது.
இலங்கை தனது பொருளாதார மீட்சியை முன்னெடுத்துச் செல்லும் போது, வினைத்திறன்மிக்க நிர்வாக சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், அண்மைய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தையும் இணை அனுசரணை நாடுகள் குறிப்பிட்டன.
“இது நிறுவப்பட்ட சுயாதீன நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக செயல்முறைகளைப் பாதுகாப்பதோடு இருக்க வேண்டும்” என்று இணை அனுசரணை நாடுகள் கூறின.
உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது அலுவலகத்துடன் இணைந்து செயற்படுமாறும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருக்குமாறும் இணை அனுசரணை நாடுகள் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளன.