குருநாகல், அத்துகல பிரதேசத்தில் காட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காதல் ஜோடி எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்துகல மலை உச்சியில் உள்ள புத்தர் சிலையை பார்வையிடுவதற்காக காதலர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர்.
இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இது. காதலனின் சட்டைப்பையில் தீப்பெட்டி இருப்பதை அவதானித்து, அவர் புகைபிடிப்பவரா என காதலி கேள்வியெழுப்பியுள்ளார். காதலன் அதை மறுத்துள்ளார். தீப்பெட்டியை காதலி வாங்கிய போது, அதற்குள் 2 குச்சிகள் இருந்துள்ளன.
யுவதி தீப்பெட்டியில் இருந்த இரண்டு குச்சிகளையும் கொளுத்தி வீசியயுள்ளார். தற்போது கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தீக்குச்சியிலிருந்து பரவிய தீ விரைவாக பரவ ஆரம்பித்தது.
இதனைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குருநாகல் மாநகரசபை ஊழியர்களின் உதவியுடன் தீயை அணைத்தனர்.
தீயினால் அழிவடைந்த பிரதேசம் 3 ஏக்கர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ பற்றியதை பார்த்து பதற்றமடைந்த காதலர்கள் அங்கிருந்து தப்பியோடினர். எனினும், பொலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞன் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.