காலியில் இன்று ஆரம்பித்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இலஙகை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்களை பெற்றுள்ளது.
54 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டை இழந்து இலங்கை படுமோசமான ஆரம்பத்தை கண்டபோது, 5வது விக்கெட்டுக்கா அஞ்சலோ மத்யூஸ்- தனஞ்ஜய டி சில்வா ஜோடி 131 ஓட்டங்களை பெற்று, ஓரளவு கௌரவமான நிலையை எட்டியது.
நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
2022 ஆம் ஆண்டில் இதே காலி மைதானத்தில் நடந்த டெஸ்டில் காயமடைந்த ஷாஹீன் ஷா அப்ரிடி, கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். இன்றைய போட்டியில் அவர்தான் இலங்கைக்கு வில்லன்.
தொடக்க வீரர்கள் நிஷான் மதுஷங்க 4, திமுத் கருணாரத்ன 29 மற்றும் குசல் மெண்டிஸ் 12 ஓட்டங்களுடன் ஷாஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் வீழ்ந்தனர்.
தினேஸ் சந்திமல் 1 ஓட்டத்துடன் நசீம் ஷா பந்தில் ஆட்டமிழக்க, இலங்கை 4/54. பலமான அணிகளுடனான டெஸ்டில் இலங்கையின் காட்சி மீள அரங்கேறுமென தோன்றிய சமயத்தில், அஞ்சலோ மத்யூஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா 131 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கையை கௌரவமான ஓட்டங்களை பெற உதவினர்.
இவர்கள் தவிர, மழையும் இலங்கையை கொஞ்சம் காப்பாற்றியது. இன்று 65 ஓவர்கள்தான் பந்து வீசப்பட்டது. மழையால் 85 நிமிடங்கள் போட்டி தடைப்பட்டிருந்தது.
அஞ்சலோ மத்யூஸ் 64 ஓட்டங்களை பெற்று, அப்ரர் அகமதுவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தனஞ்ஜய டி சில்வா 94 ஓட்டங்களுடன் (157 பந்துகள்) களத்தில் உள்ளார்.
நாளை தனஞ்ஜய டிசில்வாவுடன், புதிய துடுப்பாட்ட வீரராக ரமேஷ் மெண்டிஸ் களமிறங்குவார். இதன் பின்னால் துடுப்பாட்டம் கைவராத பந்துவீச்சாளர்களே உள்ளனர். நாளை இந்த ஜோடி சற்று தாக்குப்பிடித்தால் மாத்திரமே இலங்கை 300 ஓட்டங்களை கடக்க முடியும்.
ஷாஹீன் ஷா அப்ரிடி 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.