பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரை கடந்த மாதம் 21ஆம் திகதி சுட்டுக் கொன்ற 19 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை மேலதிக மாவட்ட நீதிபதி ஓஷத மிகர மஹராச்சி கடந்த 30ஆம் திகதி உத்தரவிட்டார். .
ஹம்பாந்தோட்டை, பந்தகிரிய பகுதியைச் சேர்ந்த சமோத் நிம்சரா என்ற 19 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு ஓடியிருந்தார். பின்னர், கடந்த 29ஆம் திகதி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் வந்து சரணடைந்துள்ளார்.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததையடுத்து, சந்தேக நபரை கடந்த 30ஆம் திகதி மாலை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த கொடித்துவக்குகே சாகர என்ற 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை கடந்த 21ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு கொலைகள் உட்பட பல குற்றங்களில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கடந்த 21ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் ஹம்பாந்தோட்டை சுச்சி கிராமத்தில் உள்ள வீதியில் பயணித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைதாகியுள்ள இளைஞன் 2016ஆம் ஆண்டு 12 வயதாக இருந்த போது, அவரது தந்தையை கொலை செய்தமைக்கு பழிவாங்கவே இந்த கொலையை செய்ததாக இளைஞன் தெரிவித்துள்ளார். தனது தந்தையை கண்முன்னே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், கொலையாளியை பழிவாங்க வேண்டுமென அப்பொழுது தொடக்கம் சிந்தித்து வந்ததாக இளைஞன் தெரிவித்துள்ளார்.