மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (1) மாலை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் சிலரை அவரது பிரத்தியேக செயலகத்தில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இதற்கான அறிவித்தலும் ஆளுநர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பில் மாவட்டத்திலுள்ள பல சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் நாளாந்த களப்பணியில் ஊடகப் பணியாற்றும் பல ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இன்று மாலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை இச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆளுநர் அலுவலகத்தினால் தொலைபேசி மற்றும் வட்சப் ஊடாக பங்குபற்றுவோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதால் ஏனைய ஊடகவியாலாளர்கள் ஆளுநரின் இவ்வாறான செயற்பாட்டிற்கு தமது அதிருப்தியினையும் எதிர்ப்பினையும் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான ஓழுங்கான தரவுகள் பெறப்படாமல் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவகம் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பாதிப்பு, மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் மற்றும் தாங்கள் அறிக்கையிட்ட விடயங்களை தொடர்பான சந்தேகங்களை கலந்துரையாடுவதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக எண்ணியிருந்த வேளை இறுதி நேரத்தில் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளமை ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.