வேலைக்கும் செல்லாமல், மது அருந்திவிட்டு சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்த மகனை குத்திக் கொலை செய்த தந்தையை, போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கொடிக்களம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம். கூலி தொழிலாளியான இவருக்கு தலா இரு மகள்கள், மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகனுக்கும், 3வது மகளுக்கும் திருமணம் முடிந்துள்ளது, மூத்த மகனான விநாயகம் மற்றும் கடைசி மகளும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், விநாயகம் வேலைக்கு செல்லாமல் சாமியார் வேடமணிந்து, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனை அவரது தந்தை பலமுறை கண்டித்தும், விநாயகம் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று இரவு விநாயகம், மது அருந்திய நிலையில் வீட்டில் ரகளையில் ஈடுபடும்போது, ஆத்திரமடைந்த அவரது தந்தை ஆறுமுகம் வீட்டிலிருந்த கத்தியால் விநாயகத்தை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்த விநாயகத்தின் உடலை, யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதையறிந்த ஆவினன்குடி காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று, விநாயகத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தை கைது செய்த ஆவினங்குடி போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.