தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒழுக்காற்று ஆசிரியரை கொடூரமாக தாக்கி அவரது வீட்டை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் 4 பேரும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் இலக்கம் இரண்டு நீதவான் மிஹில் சிரந்த சத்துருசிங்க இந்த உத்தரவை இன்று வழங்கினார்.
இதனால் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 4 மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்கத்திற்குப் பொறுப்பான ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்கள் நேற்று (23) க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக பாடசாலைக்கு வந்த போது, ஒழுக்கப் பொறுப்பாசிரியர் அவர்களைக் கடுமையாக எச்சரித்து முறையான சீருடையுடன் வருமாறு, வீடுகளுக்குத் திருப்பி அனுப்பியுள்ளார்.
வீடு திரும்பிய மாணவர்கள் உரிய முறையில் பாடசாலைக்கு வந்து அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொண்டு வெளியேறும் வேளையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் ஆசிரியரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.