தையிட்டியில் சட்டவிரோத விகாரை விவகாரம் தீவிரம் பெற்றுள்ள நிலையில், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வும் கொந்தளிப்பாகியுள்ளது. கட்சி வேறுபாடின்றி மக்களின் உணர்வுகள் ஒருமித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிடுங்குப்பாடு பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று.
தையிட்டி போராட்டம் ஆரம்பித்த போது, அனைத்து மக்களும் திரண்டு வாருங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறைகூவல் விடுத்தனர்.
நேற்றிரவு பொலிசாரின் அடக்குமுறையை தொடர்ந்து, மக்கள் திரண்டு வந்து அடக்குமுறைக்கு எதிராக அணிதிரளுமாறு முன்னணியினர் அழைப்பு விடுத்தனர்.
ஆனால், போராட்டத்தில் அனைத்து கட்சிகளையும் இணைக்கும் மனப்பக்குவம் இன்னும் முன்னணியினருக்கு வரவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், அப்படியான சம்பவங்களெ நடந்துள்ளன.
இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்டிருந்த த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ய திட்டமிட்ட போது, அதனை அங்கஜனிடமும் குறிப்பிட்டனர். தானும் அவர்களுடன் இணைவதாக அங்கஜன் குறிப்பிட்டு, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
அதுமட்டுமல்ல, தனது தலைமையில் தெல்லிப்பழை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மீறி விகாரை கட்டப்பட்டுள்ளதாகவும், இப்படியான ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் எதற்கு என்றும் கேள்வியெழுப்பினார்.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த 5 பேரும் தையிட்டி போராட்டக்களத்துக்கு சென்றனர்.
அவர்களின் வருகைக்கு முன்னணியினர் எதிர்ப்பு காட்டவில்லை. ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம், போராட்ட கிரெடிட்டை இவர்கள் பங்குபோட வந்துள்ளார்கள் என்பதை போன்ற மனநிலை வெளிப்பட்டதாகவும், முகத்தை திருப்பி வைத்திருந்ததாகவும் அங்கு சென்றவர்கள் குறிப்பிட்டனர்.
ஒரு கட்டத்தில், அங்கஜன் இராமநாதனின் உதவியாளர் ஒருவர் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வாங்கிக் கொண்டு வந்தார்.
அவர் அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அருகில் கொண்டு சென்ற போது, சட்டத்தரணி ந.காண்டீபன் முகத்திலடித்தால் போல பேசினார்.
“இவை வேண்டாம். கொண்டு செல்லுங்கள். நாங்கள் இங்கு 2,3 பேர்தானே இருக்கிறோம். எம்மிடம் இங்கு போதிய உணவு இருக்கிறது. நமது ஆட்கள் கொண்டு வருவார்கள். எடுத்துக் கொண்டு செல்லுங்கள்“ என்றார்.
அங்கஜன் இராமநாதன் நாகரிகமாக, “இல்லை.. வைத்திருங்கள். போராட்டத்துக்கு ஒரு சப்போர்ட்தானே“ என குறிப்பிட்டார்.
சிற்றுண்டிகள் வேண்டாம் என காண்டீபன் உறுதியாக கூறிவிட்டார்.
எடுத்துக் கொள்ளுங்கள் என அங்கஜன் குறிப்பிட்டு, அவற்றை அங்கு வைத்து விட்டு வந்து விட்டார்.
இங்கு இணைக்கப்பட்ட புகைப்படங்கள் இன்று மாலையில் எடுக்கப்பட்டவை. அங்கஜன் இராமநாதன் தரப்பினர் வாங்கிக் கொடுத்த சிற்றுண்டிகள் பற்றைக்குள் வீசப்பட்டுள்ளன.