“இலங்கை தமிழ் அரசு கட்சியினர் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றில் முஸ்லிம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். முல்லைத்தீவில் உள்ளவர்களிற்கு அது புரியாமல் இருக்கலாம், ஆனால் அம்பாறையை பொறுத்தவரை தமிழ் மக்களிற்கு எதிரிகள் சிங்களவர்கள் அல்ல, முஸ்லிம்களே“ என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்.
கடந்த 19ஆம் திகதி மன்னாரில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
கரைத்துறைப்பற்று பிரதேசபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பின்னணியுடைய ஐக்கிய தேசிய கூட்டமைப்பு என்ற கட்சியில், இலங்கை தமிழ் அரசு கட்சி போட்டியிடுகிறது. இந்த விவகாரம் தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது, த.கலையரசன் மேற்படி கருத்தை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் சிங்கள மக்களை விட முஸ்லிம் மக்களும், அரசியல்வாதிகளுமே தீவிரமாக செயற்படுவதாக குற்றம்சாட்டினார். வேலைவாய்ப்பில் தமிழ் மக்களின் வாய்ப்புக்கள் பறிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களின் பூர்வீக நிலமான கல்முனையில், தமிழ் பிரதேச செயலகம் உருவாக் விடாமல் தடை செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலைமைகளை முல்லைத்தீவில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், கிழக்கில் – குறிப்பாக அம்பாறையில் தமிழ் மக்கள் முஸ்லிம் தரப்பினாலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு எமது பிரதான எதிரி சிங்களவர்கள் அல்ல முஸ்லிம்களே என தெரிவித்தார்.
(மேலேயுள்ள படம் 19ஆம் திகதி தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், த.கலையரசன் ஆகியோர் உரையாடிக் கொண்டிருந்தனர்(