உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரச திணைக்களங்கள் பலவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்பின் 10, 12(1) மற்றும் 14(1)(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த மனுவைத் தொடர உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அனுமதி வழங்கியது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர், திறைசேரி செயலாளர், அரசாங்க அச்சகர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக நபர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் உரிய சட்டதிட்டங்களின்படி 04 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல்கள் முன்பு 2018 இல் நடத்தப்பட்டன. 2022 இல் காலாவதியாகவிருந்த உள்ளாட்சி அதிகாரசபைகளின் பதவிக்காலம் அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.
அரசாங்க அச்சகர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நடத்தை உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியும், திறைசேரியின் செயலாளரும் 2023 பெப்ரவரி 23ஆம் திகதி கடைசி நிமிடம் வரை தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டில் சவாலான விடயம் இருப்பதாக சுட்டிக்காட்டவில்லை எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் மனுதாரர்கள் மற்றும் இலங்கையின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதகமானவை என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், நகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபைகள் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மார்ச் 19ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரச அச்சகர், பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (நிதி அமைச்சராக) மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியோர் 19ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனுதாரர்கள் சார்பில் லூவி கணேசதாசன் மற்றும் கியாதி விக்ரமநாயக்க ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியா ஆஜராகினர். பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன ஆஜரானார்