தெற்கு இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் படகு விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் உயிர் தப்பியுள்ளதாக இத்தாலிய தீயணைப்பு படைகளின் சேவையின் செய்தி தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
Calabria பகுதியின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஸ்டெக்காடோ டி குட்ரோ கடற்கரையில் இந்த விபத்து நிகழ்ந்தது. படகு கரைக்கு வெகு அண்மையாக பாறையில் மோதி சிதைந்தது.
மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு கிழக்கு துருக்கியில் உள்ள இஸ்மிரில் இருந்து படகு புறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.
சிறிய படகில் 150 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த இந்த படகு, இத்தாலிய கடலோர நகரமான குரோடோனிலிருந்து 20 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஸ்டெக்காடோ டி குட்ரோவை நெருங்கிக்கொண்டிருந்தபோது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. படகு சிதைந்து அகதிகள் கடலில் மூழ்கியுள்ளனர்.
இதுவரை 45 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 80 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குகிறார்கள். பலர் காணாமல் போயுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 7 அல்லது 8 குழந்தைகளும், 12 வரையான பெண்களும் அடங்குகிறார்கள்.
உயிர் பிழைத்தவர்களில், 59 பேர் ஐசோலா கபோ ரிஸுடோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்களில் பாதி பேர் சிறார்கள்.