Site icon Pagetamil

துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 24,000ஆக உயர்ந்தது!

துருக்கி, சிரியா பிராந்தியங்களை தரைமட்டமாக்கிய பேரழிவு நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000ஐ எட்டுகிறது. கட்டிட குவியலாக மாறியுள்ள பரந்த பிராந்தியத்தில் சிக்கியுள்ளவர்களை உயிரோடு மீட்கலாமென்ற நம்பிக்கையில் 115 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்கிறது.

திங்களன்று துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தரைமட்டமாகிய இடிபாடுகளின் மத்தியிலிருந்து தொடர்ந்தும் உயிருடன் பலர் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,318 ஆக உயர்ந்துள்ளது. 80,088 பேர் காயமடைந்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு நிலவரத்தின்படி சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,553 ஆகவும், ஆட்சி நடத்தும் பகுதிகளில் 1,387 ஆகவும், எதிர்க்கட்சி கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் 2,166 ஆகவும் உயர்ந்துள்ளது.

துருக்கியின் சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சர் முராத் குரும் கருத்துப்படி, துருக்கியில் சுமார் 12,000 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தை மையமாகக் கொண்ட 7.7 மற்றும் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள், அதானா, அதியமன், டியார்பாகிர், காஜியான்டெப், ஹடாய், கிலிஸ், மாலத்யா, உஸ்மானியே மற்றும் சான்லான் உட்பட 10 மாகாணங்களில் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியில் 116 மணி நேரத்திலும் சிலர் மீட்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக துணைத் தலைவர் ஃபுவாட் ஒக்டே பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதேவேளை,

அல்பேனிய அரசாங்கம் ஒரு நாள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பெப்ரவரி 13ஆம் திகதி தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் எடி ராமா தெரிவித்தார்.

“சிறிது காலத்திற்கு முன்பு அல்பேனியாவில் இதேபோன்ற பேரழிவு ஏற்பட்டபோது எங்கள் அருகில் இருந்த நட்பு நாடான துருக்கி செய்த உதவிகள் மகத்தானவை. அவர்களுடனான ஒற்றுமையின் அடையாளம்,” ரமா கூறினார்.

அல்பேனியா 73 பேர் கொண்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவை துருக்கிக்கு அனுப்பியுள்ளது. தென் அடானா மாகாணத்தில் குழு தனது முயற்சிகளைத் தொடர்கிறது.

Exit mobile version