பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நடிகை பானுப்பிரியா, தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் பட உலகில் 1980 களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா.
பானுப்பிரியா, தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக சமீபத்திய தெலுங்கு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பானுப்பிரியா, நடனத்திலும் சிறந்து விளங்கினார்.
இவர், கடந்த 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா என்கிற மகளும் உள்ளார்.
இவர் கடைசியாக தமிழில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இதுகுறித்து பானுப்பிரியா கூறியதாவது:- “சமீப காலமாக எனக்கு உடல்நிலை சரியில்லை. நினைவாற்றல் இழப்பு. நான் கற்றுக்கொண்ட சில விஷயங்களை மறந்துவிட்டேன். பின்னர் நடனத்தில் ஆர்வம் குறைந்தது. நான் வீட்டில் நடனம் கூட பயிற்சி செய்வதில்லை.
சமீபத்தில் ஒரு படத்தின் லோகேஷனில் டயலாக்குகளை மறந்துவிட்டேன். நினைவில் கொள்ள வேண்டிய பல விஷயங்களை மறந்துவிடுகிறேன் என கூறினார்.
பானுப்பிரியாவும் சில மருந்துகளை எடுத்து வருகிறார். கணவரை பிரிந்ததாக வெளியான செய்தியும் தவறு என்கிறார் பானுப்பிரியா. தற்போது என் கணவர் உயிருடன் இல்லாததால் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன் எனது உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அப்போது நடிகை ராதா பதறியடித்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார் என பானுப்பிரியா தெரிவித்தார்.