வெள்ளிக்கிழமை இரவு மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட அறிக்கை நாளை (6) ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் தொடரும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பெரும் தொகை செலவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் குழு போராட்டம் நடத்தியதுடன் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மற்றொரு குழுவினர் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு அந்தக் குழுவைக் கலைக்க போலீசார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அமைதியின்மையின் போது கைது செய்யப்பட்ட மூவர் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.