ஷேட்ஸ் பேஷன் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் உரிமையாளரா ரொஷான் வன்னிநாயக்க கொல்லப்பட்டு, நீச்சல் தடாகத்தில் வீசப்பட்ட சம்பவம் பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளம்ஜொடியொன்று இந்த கொலையை செய்துள்ளனர். வர்த்தகரின் காருடன் தப்பிச் சென்ற ஜோடி, காரை நீர்கொழும்பில் கராஜ் ஒன்றில் நிறுத்தி விட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளது. அந்த காரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
ரொஷானை கொன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தோனேசியாவிற்கு தப்பிச் சென்றதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இளம் ஜோடி யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இவர்கள் ரோஷனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பணம் பறிக்கும் நோக்கில் வர்த்தகர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வர்த்தகரை கொன்றுவிட்டு ஓடிய இளம் தம்பதியினர் பணத்துடன் கூடிய பையை எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில், சந்தேகத்திற்கிடமான இளம் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட ரொஷானின் கடன் அட்டைகள், மொபைல் போன்கள் மற்றும் பணப்பையையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த கிரெடிட் கார்டுகளில் ஒன்றை பயன்படுத்தி, ஒன்பது இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து இந்தோனேஷியா செல்ல இரண்டு விமான டிக்கெட்டுகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை வாங்கியதும் தெரியவந்துள்ளது.
விசாரணைக் குழுவின் கூற்றுப்படி, இந்த கொலை மிகவும் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.
ரொஷான் வன்னிநாயக்க கடந்த 30ஆம் திகதி மாலை உடற்பயிற்சி செய்வதற்காக வெல்லம்பிட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் சென்றுள்ளார்.
உடற்பயிற்சி செய்துவிட்டு அன்று மாலை பெலவத்தை பகுதியில் உள்ள தனது மூன்று மாடி வீட்டிற்கு சென்றுள்ளார்.
பெலவத்தையில் உள்ள தனது புடைவைக் கடையில் இருந்த தனது வீட்டின் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைத் திறந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரொஷானைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் இளம் தம்பதியினர் நுகேகொட பிரதேசத்தில் உள்ள மருந்துக் கடையொன்றில் இருந்து 3 ஆணுறைகளை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
ரொஷானை சந்திக்க தம்பதியினர் கருத்தடை உறையுடன் வந்திருந்தனர். அந்த யுவதி மட்டும்தான் ரொஷானிற்கு அறிமுகமானவரா? இளைஞரும் அறிமுகமானவரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ரொஷான் கொல்லப்பட்ட நீச்சல் குளத்திற்கு அருகில் 3 ஆணுறைகள் இருந்தன. அதில் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த 30ஆம் திகதி இரவு இந்த வீட்டில் என்ன நடந்தது என்பது இதுவரை வெளிவரவில்லை. ஆனால் அன்றிரவு இளம் ஜோடி ரொஷானின் காரை எடுத்துக்கொண்டு கட்டுநாயக்க நெடுஞ்சாலை வழியாக விமான நிலையத்திற்கு புறப்பட்டனர்.
ஆனால் ஜா-எல பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கார் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், இளம் ஜோடி நெடுஞ்சாலை அவசர சேவைக்கு தகவல் வழங்கி, ஜா-எல அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து தங்கள் காரை வெளியே எடுத்தனர்.
பின்னர் மற்றுமொரு அவசர வாகனம் வரவழைக்கப்பட்டு ரொஷானின் காரை அதில் ஏற்றி நீர்கொழும்பு பகுதியிலுள்ள கராஜ் ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர். காரை கராஜில் விட்டுவிட்டு, மற்றொரு வாகனத்தில் அந்த ஜோடி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அன்றைய தினம் அதிகாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து ரொஷானின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி தம்பதியினர் பல பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இளம் ஜோடி நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் எவ்வாறு தப்பிச் சென்றனர் என்பதை அறிய கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.