மதுபானம் குடித்தால் வீட்டை அசிங்கமாக்கி விடுவார் என்பதால் வீட்டில் மதுபானம் அருந்தக்கூடாது என்று தனது 53 வயது தந்தையிடம் மகள் ஷிவதர்ஷினி கருணாநிதி கூறி யிருந்தார். ஆனால் ஒரு நாள் காலை அவர் எழுந்தபோது வரவேற்பு அறை முழுவதும் மதுபானக் கேன்கள் சிதறிக் கிடந்தன. இரவெல்லாம் தந்தை மதுபானம் குடித்திருந்ததால் ஆத்திரமடைந்த ஷிவதர்ஷினி அவரது தலையை சுத்தியலால் பலமுறைத் தாக்கினார்.
நீதிமன்றத்தில் தந்தையைத் தாக்கிய குற்றத்தை 28 வயது ஷிவதர்ஷினி ஒப்புக் கொண்டார்.
மாவட்ட நீதிபதி இயூஜின் டியோ, கட்டாய மனநல சிசிச்சைக்கு அவர் ஏற்றவரா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தர விட்டார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படித்த ஷிவதர்ஷினி வேலை தேடிக் கொண்டிருந்தார். வீட்டில் தாய், தந்தை, இளைய சகோதரியுடன் அவர் வசித்து வந்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2020 ஜனவரி 6ஆம் திகதி சம்பவத்தின்போது சமையல் அறையிலிருந்து 34 செ.மீட்டர் நீளமுள்ள சுத்தியலை எடுத்து வந்த ஷிவதர்ஷினி, குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் தலை மீது இரண்டு முதல் நான்கு முறை ஓங்கி அடித்தார். அப்போது தாயார் வீட்டில் இல்லை. இளைய சகோதரி உறங்கிக் கொண்டிருந்தார்.
வலியில் எழுந்த அவரது தந்தையின் தலையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஷிவதர்ஷினி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மண்டையோடு உடைந்த அவரது தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நான்கு நாள்களுக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.
இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.