தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் சிறையிலிருந்து பரோலில் வந்து வாளால் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டு நிரூபணமானதை தொடர்ந்து, குர்மீத் ராம் ரஹீம், ஹரியானாவின் ரோஹ்தக்கின் சுனாரியா சிறையில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஜனவரி 25ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென கேட்டு, 40 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். அவர் சனிக்கிழமை பரோலில் வெளிவந்து உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள தனது பர்னாவா ஆசிரமத்திற்கு வந்தார்.
சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள வீடியோவில், சமியார் ரஹீம், “ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்று கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைத்தது, எனவே நான் குறைந்தது ஐந்து கேக்குகளையாவது வெட்ட வேண்டும். இது முதல் கேக்” என கூறுகிறார்.
ஆயுதங்களை பொதுமக்கள் காட்சிப்படுத்துவது அதாவது வாளால் கேக் வெட்டுவது ஆயுதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.
ராம் ரஹீம் திங்களன்று தனது பிரிவின் தன்னார்வலர்களால் ஹரியானாவிலும் வேறு சில மாநிலங்களிலும் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மெகா தூய்மை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
ஹரியானாவைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள், ராஜ்யசபா எம்பி கிரிஷன் லால் பன்வார், முன்னாள் அமைச்சர் கிரிஷன் குமார் பேடி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ராம் ரஹீமுக்கு கடந்த 14 மாதங்களில் நான்காவது முறையாகவும், மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாகவும் பரோல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹரியானா பஞ்சாயத்து தேர்தல் மற்றும் அடம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக அவர் அக்டோபர் 2022 இல் 40 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால், இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து, குருக்ஷேத்திராவில் உள்ள சதார் காவல் நிலையத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை எடுத்துக் கொண்டது.
Baba Ram Rahim who is serving a 20-yr-sentence for allegedly raping 2 of his followers in his Dera ashram got 40-day parole and came out of jail on Jan https://t.co/SG1997bplu is seen cutting a cake with a sword. Ram Rahim has got parole 4 a total of 133 days so far! pic.twitter.com/DA8Ry4LdZZ
— Shikha Salaria (@Salaria_Shikha1) January 23, 2023
கடந்த 2002ஆம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பில் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங், வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார். அதனால் ரஞ்சித்தை சிங்கை கொலை செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது.
இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குர்மீத் ராம் ரஹிம் அதீத செக்ஸ் அடிமை என்பதால், சிறைசென்ற ஆரம்ப கட்டத்தில் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லையென சிறை மருத்துவ வட்டாரங்களை மேற்கோளிட்டு செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.