இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறிய பின்னர், இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது.
கூட்டமைப்பை உடைக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முடிவை இந்தியா இரசிக்கவில்லையென்பது, ஜெய்சங்கருடனான சந்திப்பு அழைப்பில் பிரதிபலித்துள்ளது.
வழக்கமாக இவ்வாறான சந்திப்புக்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்க இந்திய வெளியுறவு அமைச்சர் விரும்புவார். எனினும், இம்முறை அப்படி நடக்கவில்லை.
ரெலோ, புளொட், இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி உள்ளிட்ட அணிகள் அனைத்தும் ஒன்றாக சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளன.
காலை 11.15 மணிக்கு சந்திப்பு நடைபெறும்.
இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்த கொழும்பிலுள்ள இந்திய தூதரகம், ஆறு கட்சிகளின் தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பணிகளை கவனித்து வரும் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்வது நிச்சயமில்லை. நாளைக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், அவர் அந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தரப்பின் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நண்பகல் 12 மணிக்கு ஜெய்சங்கர் தனியாக சந்திக்கிறார்.