மகளிருக்கான யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவில் இன்று தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதன்முறையாக இந்த தொடரை நடத்துவதால் இளம் வீராங்கனைகள் உலக அரங்கில் பிரகாசிக்க சிறந்த வாய்ப்பு உருவாகி உள்ளது.
ஆடவருக்கான யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி கடந்த 1988ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதுவரை 14 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் மகளிருக்கான யு 19 உலகக் கோப்பை தொடர் நடத்தப்படுவது இதுவே முன்முறையாகும். கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் வகையிலும், இளம் வீராங்கனைகளின் திறமைகளை கண்டறிவதற்காகவும் யு 19 உலகக் கோப்பை தொடரை ஐசிசி முன்னெடுத்துள்ளது.
இந்தத் தொடர் 2021ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது நடைபெறுகிறது.
டி 20 வடிவிலான இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி வரும் 29ஆம் திகதி வரை நடைபெறுகிறது. 16 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் மொத்தம் 41 ஆட்டங்கள் பெனோனி, போட்செஃப்ஸ்ட்ரூம் உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறுகிறது.
ஐசிசியின் முழுநேர அந்தஸ்து பெற்ற இலங்கை, அவுஸ்திரேலியா, பங்களதேஸ், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகிய 11 அணிகள் யு 19 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றன.
இந்த அணிகளுடன் ஐசிசியின் 5 பிராந்தியங்களில் இருந்து தலா ஒரு அணி என அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ருவாண்டா, ஸ்கொட்லாந்து, இந்தோனேஷியா அணிகளும் கலந்து கொள்கின்றன.
விஷ்மி குணரத்ன தலைமையிலான இலங்கை அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், அமெரிக்கா அணிகளும் உள்ளன.
இலங்கை தனது முதல் ஆட்டத்தில் இன்று அமெரிக்கா அணியுடன் மோதுகிறது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய- தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.
முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா – பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத உள்ளன.