30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ராஜபக்ச சகோதரர்கள் வெளிநாட்டு பயணத்திற்கென செலவிட்ட பொதுமக்கள் பணம் எவ்வளவு தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களை விட அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு மிக அதிகம் என்பது தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

பதவியில் இருந்த போது ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் வெளிநாட்டு பயணங்களிற்காக ரூ.44 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளனர். இதில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு வெளிநாட்டு விஜயங்களுக்காக  ரூ.36 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்று உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்கு ரூ.7 மில்லியன் செலவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களினால் மாத்திரம் 2021 ஆம் ஆண்டு அரசுக்கு ரூ.40 மில்லியன் செலவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விவரங்களில் தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விவரங்கள், ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் ரூ.44, 739,184.91 செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022 ஜனவரி 1ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு உரிய விவரங்கள் கோரிய கோரிக்கை முதலில் நிராகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பான மேல்முறையீட்டை பரிசீலித்த இலங்கை தகவல் உரிமை ஆணைக்குழு, கோரப்பட்ட விவரங்களை ஊடகவியலாளர்களிடம் வழங்குமாறு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அலுவலகங்கள் 14 வேலை நாட்கள் அல்லது 21 நாட்களுக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் என்றாலும், அவர்கள் பத்து மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டனர்.

கிடைத்த விவரங்களின்படி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வெளிநாட்டு விஜயங்களுக்காக ரூ.36 மில்லியன் (ரூ.36, 970,864.14)  செலவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மூன்று உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்கு ரூ.7 மில்லியன் செலவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நியூயோர்க் (அமெரிக்கா), கிளாஸ்கோ (இங்கிலாந்து) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயங்களுக்காக ரூபா 7,768, 320.77 செலவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விஜயங்களின் நோக்கம் ஜனாதிபதி செயலகத்தால் விளக்கப்படவில்லை.

நியூயோர்க் பயணத்திற்கு ரூ. 5,461,221.71. கிளாஸ்கோ பயணத்திற்கு ரூ.1,785, 210.42 மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான அவரது விஜயத்திற்காக ரூ. 521,888.68 செலவிடப்பட்டது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஷேக் முகர்ஜி ரகுமானின் பிறந்தநாளில் கலந்துகொள்வதற்காக மார்ச் 19, 2021 அன்று பங்களாதேஷுக்கு விஜயம் செய்ததற்காக 10 மில்லியனுக்கும் அதிகமான (10,568,962.53) செலவிட்டுள்ளார்.

செப்டம்பர் 10, 2021 அன்று G20 சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இத்தாலிக்கு விஜயம் செய்தார். இத்தாலியில் நடந்த மாநாட்டில் அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் கலந்துகொண்டனர். இதற்காக ரூ.26,401,901.61 செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மற்றும் அவரது பிரதிநிதிகள் இத்தாலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு உண்பது போன்ற புகைப்படத்தை ஒரு ஊடக இணையதளம் பகிர்ந்திருந்தது. அது அப்போது அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஒப்பிடும் போது, ​​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினம் மிக அதிகமாக இருந்ததாகவும், முன்னாள் பிரதமருடன் வெளிநாடுகளுக்குச் சென்ற அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட நண்பர்களை கொண்ட பெருமளவான பாரிவாரங்களே இதற்குக் காரணம் எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் செயலாளர் காமினி செனரத், முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே மற்றும் இத்தாலியில் உணவு உண்டு மகிழ்ந்தவர்களில் மஹிந்த, அவரது மனைவி, அவரது மகன் மற்றும் அவரது மருமகன் ஆகியோரைக் காட்டும்  இணையத்தளத்தின் படத்தில் இருந்து இது தெளிவாகத் தெரிகிறது.

நடைமுறையின்படி, பிரதமர் வெளிநாட்டில் இருக்கும்போது, ​​அந்த பிரதமரின் செயலாளர் கடமையில் இருக்க வேண்டும், இது வெளியுறவு அமைச்சருக்கும் வெளியுறவுத்துறை செயலருக்கும் பொருந்தும். எனினும் இத்தாலிய பயணத்தின் போது செனரத் பிரதமருடன் சென்றிருந்த அதேவேளை கொலம்பகேவும் வெளிவிவகார அமைச்சருடன் சென்றிருந்தார். இரு செயலாளர்களும் ஏன் இத்தாலியில் இருந்தனர் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

நாடு கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட ஒரு முக்கியமான தருணத்தில், நாட்டின் தலைவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளிநாட்டு பயணங்களுக்கு பொது நிதியைப் பயன்படுத்தியது மிகவும் கவலைக்குரியது. .

எவ்வாறாயினும், இவ்வாறான வெளிநாட்டு விஜயங்களுக்கான அதிகப்படியான செலவுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியமை தெளிவான அறிகுறியாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment