அமெரிக்காவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான சட்டமூலம் செனட் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு பெரும் விவாதத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன்பாலின திருமண அங்கீகாரத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் செனட் சபையிலும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் மூலம் ஒரு மாகாணத்தில் தன்பாலின திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களிலும் செல்லுபடியாகும்.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், “இன்று செனட் சபையில் திருமணங்களுக்கு மரியாதை சட்டம் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா ஒரு அடிப்படை உண்மையை நிலைநிறுத்தியுள்ளது. அன்பு அன்புதான். அனைத்து அமெரிக்கர்களுக்கும் அவர்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த உண்மை” என்றார்.
செனட் சபையில் இந்த சட்டத்திற்கு 61 பேர் ஆதரவாகவும் 36 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இந்த சட்டமூலம் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. அங்கே ஒப்புதல் பெற்று சட்டமூலம் பைடன் கையெழுத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
மாற்றத்தை விதைத்த ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவி வகித்த காலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்பாலின திருமணம் செய்து கொள்வது அமெரிக்கா முழுவதும் சட்டபூர்வமானது. முன்பு 36 மாகாணங்களில் மட்டுமே தன்பாலின திருமணம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க உயர் நீதிமன்றம் நேற்று நாடு முழுவதும் தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வமான அனுமதியை வழங்கியது. இதையடுத்து மீதமுள்ள 14 மாகாணங்களிலும் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும் நிலை உருவானது. ஆனால் அதன் பின்னர் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கினால் செனட் சபையில் எதிர்ப்பு என மாறி மாறி தடங்கள் வந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சட்டமூலம் செனட் சபையில் நிறைவேறியது.