கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை எபடீன் நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று மாயமான இளைஞன் ஒருவர் இன்று (29) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற போது நேற்று நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளார்.
அப்போது நீராடிக்கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு இழுத்துச்செ செல்லப்பட்டு மாயமானதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ டின்சின் பிரதேசத்தில் வசிக்கும் கிசான் இனோஜன் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கிய இளைஞனை மீட்பதற்கு நேற்று பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நேற்று அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று கடற்படை சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த நிலையில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களால் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.