மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அரச பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நடந்தேறியது.
கிரான் தரவை, வாகரை கண்டலடி, வவுணதீவு மாவடிமும்மாரி, வவுணதீவு தாண்டியடி போன்ற மாவீரர் துயிலும் இல்லங்களில் பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் நினைவேந்தல் இடம்பெற்றது.
கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் குருசுமுத்து வி.லவக்குமார் மற்றும் இ.நிதர்சன் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஆயிரக்கனக்கான மாவீரர் உறவுகளுடன் மதகுருமார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் த.சுரேஸ் ஆகியோர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
நினைவேந்தல் நிகழ்வில் 3 மாவீரர்களின் தாயார் பொ. இராசம்மா பொதுச்சுடர் ஏற்றிவைத்தார்.
மாவீரர்களின் உறவுகளினால் மாலை 6.05 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை குறித்த கிரான் தரவை பிரதேசமானது யானைகளின் நடமாட்டமும் காடு அடர்ந்த பிரதேமாகும். நேற்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வு முடிந்து குடும்பிமலை பிரதேசத்திற்கு வீடு திரும்பிய மாவீரரின் தாயார் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமுற்ற நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-க.ருத்திரன்-