ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதை இலங்கை ஆதரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை டோக்கியோவில் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியுடன் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் இந்த செய்தியை வரவேற்று, உலக அரங்கில் ஆசியாவிற்கு அதிக பிரதிநிதித்துவம் தேவை என்று வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் முன்னேற்றத்தை வரவேற்றதுடன், இலங்கையின் கடன் வழங்குனர் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கை வகிக்க தமது நாடு விருப்பம் தெரிவிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் அரசாங்கம் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி விக்ரமசிங்க வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது, அந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் ஜப்பான் முதலீடு செய்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான தனது அர்ப்பணிப்பை ஜப்பான் அதிகரித்துள்ளதாகவும் இலங்கையில் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை ஆராய தயாராக இருப்பதாகவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி விளக்கமளித்துள்ளார்.
இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திறமையான பணியாளர் பரீட்சையை ஜப்பான் 2023 ஜனவரியில் ஆரம்பிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விளக்கினார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது டோக்கியோ சென்றுள்ளார்.