29.8 C
Jaffna
March 29, 2024
இந்தியா

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த எஸ்பிவேலுமணி, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். அதிமுகவின் கொறடாவாகவும், தலைமை நிலைய செயலாளராகவும், கோவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எஸ்பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருமுறை சோதனை நடத்தி உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது முறையாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆட்சியின் போது, கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை, எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக அமைச்சராக இருந்த வேலுமணி ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முறைகேடான முறையில் ஒப்பந்தங்களைப் பெற்றதாக சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கேசிபி தனியார் நிறுவன மேலாண் இயக்குநர் சந்திரபிரகாஷ், அந்நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகர், கோவை ஏசிஇ டெக் மெஷினரி நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த்தன், பிஎன் புதூரைச் சேர்ந்த சிஆர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ராஜன், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சபரி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், சென்னை புரசைவாக்கம் முருகன் எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் உரிமையாளர் பரசுராமன், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஓரியன்ட் போல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் விஜயகுமார், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்கேஎம் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் உரிமையாளர் மணிவண்ணன் ஆகியோர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவையில் உள்ள எஸ்பி வேலுமணியின் வீடு, அவருக்கு நெருக்கமான சந்திரசேகர் வீடு என கோவையில் மட்டும் 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னையில் அம்பத்தூர், புரசைவாக்கம் உள்ளிட்ட 10 இடங்கள், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி ஆகிய இடங்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை குறித்த தகவல் அறிந்த அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் எஸ்பி வேலுமணியின் வீட்டின் முன்பாக திரண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment