தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியுள்ள போதிலும், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், பிற கட்சிகளில் இருந்தும் “இழுத்தெடுக்கப்பட்ட“ உறுப்பினர்களுடன் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த அமைச்சரவை நியமனத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரே அனேக அமைச்சுக்களை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அமைச்சரவை நியமனத்தின் போது, அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டிய கட்சியின் மாவட்ட தலைவர்களின் பட்டியலை பொதுஜன பெரமுன தரப்பு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த, காஞ்சன விஜேசேகர ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதன்மூலம், கடந்த அரசாங்கத்தில் பதவிவகித்த அதே தோல்வியடைந்த அமைச்சர்களே புதிய அரசாங்கத்திலும் பதவி வகிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து பல்டியடித்த உறுப்பினர்கள் பலர் உள்வாங்கப்பட உள்ளதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சில உறுப்பினர்களை அமைச்சரவைக்கு இழுத்தெடுக்க ஜனாதிபதி தீவிர முயற்சி மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை. இதையடுத்த, அவர்களை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமைப் பதவியையாவது ஏற்க வைக்க பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக மேற்படி இரண்டு கட்சிகளையும் சேர்ந்த யாராவது ஒருவரையேனும் நியமிக்க முயற்சிகள் நடக்கிறது. இது தொடர்பில் க.வி.விக்னேஸ்வரனுடனும் ஜனாதிபதி தரப்பு பேசிப்பார்த்துள்ளது. எனினும், விக்னேஸ்வரன் அதை நிராகரித்து விட்டார். முன்னதாக அரசில் இணையும் கோரிக்கையையும் அவர் நிராகரித்திருந்தார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க முடியாத பட்சத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பிலும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.
சுமார் முப்பது பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது