சீனாவின் இராணுவப் பயிறசியின் இரண்டாம் நாளில், சீன ஏவுகணைகள் தைவானிற்கு மேலாக ஏவுப்பட்டுள்ளன.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் விஜயத்தை தொடர்ந்து பிராந்தியத்தில் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. தனது நாட்டின் ஒரு பகுதியான தைவானிற்கு அமெரிக்க சபாநாயகர் மேற்கொண்ட விஜயம், இரு நாடுகளிற்குமிடையிலான உறவை சீர்குலைத்து விட்டதாக சீனா அறிவித்துள்ளது.
தைவான் ஜலசந்தியில் சீனா போர்ப்பயிற்சிகளையும் நடத்தி வருகிறது.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பொலோசி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சீனா பொருளாதார தடை அறிவித்துள்ளது. அத்துடன், காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலைமையில், தைவான் ஜலசந்தியில் நடக்கும் சீனா இராணுவ ஒத்திகையின் இரண்டாம் நாளில், தைவானிற்கு மேலாக ஏவுகணைகள் ஏவப்பட்டன.
தைவான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இதனை உறுதிப்படுத்தவில்லை. என்றாலும், தைவானை கடந்து சென்றதாக நம்பப்படும் குறைந்தது நான்கு ஏவுகணைகளையாவது கண்டுபிடித்ததாக ஜப்பான் கூறியது.
பிராந்தியத்தில் பதட்டங்களுக்கு மத்தியில், தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை குறைந்தது 68 சீன போர் விமானங்கள் மற்றும் 13 போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தி வழியாக செல்லும் “மத்திய எல்லையை” கடந்ததாக அறிவித்தது. தைவானில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் சீனா இந்த பயிற்சியை நடத்தி வருகிறது.