ஐரோப்பாவைக் கடும் வெப்பம் சூழ்ந்துள்ளது.
பிரான்ஸின் பல பகுதிகளில் சிவப்பு விழிப்புநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று பிரஞ்சு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
நாட்டின் காட்டுத்தீச் சம்பவங்களால் 24,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறித் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
ஸ்பெயினில் நிலைமை இன்னும் மோசம்.
அங்கு நாடு முழுதும் கடுந்தீயை எதிர்நோக்கும் ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் எட்டலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
70,000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட காட்டுநிலம் தீயில் கருகிவிட்டது.
ஸ்பெயினில் இதுவரை இதுபோல் நடந்ததில்லை.
இத்தாலியில் தீபகற்பம் எங்கும் கடும் வெப்பம் தகிக்கிறது.
நாட்டின் வடக்குப் பகுதியில் பல மாதமாகச் சந்தித்து வந்த வறட்சி மேலும் மோசமாகி இருக்கிறது.
இரண்டு வாரத்துக்கு முன்பு வெப்பத்தால் பனிப்பாறை உடைந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.
பிரிட்டனில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. இன்று 40 டிகிரியாக உயருமென எச்சரிக்கப்பட்டுள்ளது.