‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், பழுவூர் ராணி நந்தினி ஆகிய கதாபாத்திரங்களின் தோற்றங்கள் வெளியான நிலையில் தற்போது குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் த்ரிஷாவின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கல்கியின் புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் திரை ஆக்கம்தான் இந்தப் படம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியாகிறது. அண்மையில் ‘வருகிறான் சோழன்’ என்ற தலைப்புடன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.
இதையடுத்து, இந்தப் படத்தில், சோழப் பேரரசின் பட்டத்து இளவரசன் அதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரமின் தோற்றத்தைப் படக்குழு ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. நேற்று வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியின் தோற்றமும் வெளியானது.அந்தப் போஸ்டரின் கேப்ஷனாக ‘ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன்… இதோ வந்தியத்தேவன்!’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து நேற்று, பழுவூர் ராணி நந்தினியின் தோற்றமும் வெளியிடப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இந்தப் புகைப்படத்துக்கு கேப்ஷனாக ‘பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும்!” என்று பதிவிடப்பட்டிருந்தது.
In a world of men, a woman of courage. Presenting Princess Kundavai! #PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! 🗡️@LycaProductions #ManiRatnam @arrahman pic.twitter.com/DgqCVNNrnB
— Madras Talkies (@MadrasTalkies_) July 7, 2022
இந்நிலையில் தற்போது குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷாவின் தோற்றம் வெளியிடபட்டுள்ளது. அதில், ”ஆண்களின் உலகில் தைரியமான பெண். இளவரசி குந்தவை” என பதிவிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



