சொந்த தங்கையை பாலியல் வன்புணர்வு செய்வதற்கு அக்காவே காரணமாக அமைந்த கொடூர சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அம்மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் உறவில் இருந்துள்ளார். இந்த விவகாரம் அவரது 12 வயது இளைய சகோதரிக்கு தெரியவந்துள்ளது. இளம் பெண்ணின் தங்கை விஷயத்தை குடும்பத்தினரிடம் தெரிவிக்கவே, அவர்கள் இளம் பெண்ணை கண்டித்துள்ளனர்.
இதனால், தங்கை மீது ஆத்திரம் கொண்ட 19 வயது இளம் பெண் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என கொடூர திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி, தனது தங்கையை அருகே உள்ள கரும்பு காட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, இளம் பெண் தான் உறவில் இருந்த நபர் மற்றும் அவரது ஆண் நண்பர்கள் 5 பேரை ரகசியமாக வரவழைத்துள்ளார்.
அங்கிருந்த ஆறு ஆண்களும் அக்காவின் முன்னரே அவரது தங்கையை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி பின்னர் அவரின் துப்பட்டாவை கொண்டு படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் உடலை காவல்துறையினர் கரும்பு காட்டில் கண்டெடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் கூறுகையில், இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தங்கையின் மீது அந்த இளம் பெண் எத்தனை வன்மம் கொண்டிருந்துள்ளார் என்பதை அது காட்டுகிறது.இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர் வீடு திரும்பிய இளம் பெண் எதுவும் நடக்காதது போல் இயல்பாகவே நடந்துள்ளார்.
பின்னர் தங்கள் மகளை காணவில்லையே என பெற்றோர் தேடி பார்த்த போது தான் நடந்த உண்மை தெரிய வந்துள்ளது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவருமே வயது வந்தோர் என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.