வடபிராந்தியத்தில் இன்று (27) இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை.
வடபிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகளை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவில்லையென்றும், ஊழியர்கள் எரிபொருள் இன்மையால் கடமைக்கு சமூகமளிக்கவில்லையென்றும் தெரிவித்தனர்.
அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சேவை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க பெற்றோல் வழங்கப்பட வேண்டும், அது வழங்கப்படாத பட்சத்தில் இன்று முதல் பணியில் ஈடுபடப் போவதில்லையென இலங்கை போக்குவரத்துசபை வடபிராந்திய தொழிற்சங்கங்கள் நேற்று அறிவித்திருந்தன.
இதை தொடர்ந்து, யாழ் மாவட்டத்திலுள்ள 3 சாலை ஊழியர்களிற்கும் தலா ரூ.2,000 பெறுமதியான பெற்றோல் இன்று வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். வடக்கின் ஏனைய மாவட்ட சாலை ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வடக்கு ஆளுனர் தெரிவித்திருந்தார்.
எனினும், இன்று கடமைக்கு சமூகமளிக்க எரிபொருள் இல்லையென தெரிவித்து, வடக்கிலுள்ள 7 சாலைகளின் போக்குவரத்தும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. வழக்கமாக அதிகாலையில் இடம்பெறும் சேவைகளும் இடம்பெறவில்லை.
யாழ் நகரிலிருந்து அதிகாலையில் மன்னார் புறப்படும் அரச ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்து மட்டும் புறப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பேருந்துகள் திரும்பிச் செல்கின்றன.