தனது தேசியப் பட்டியல் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுக்களை தொடர அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என சூதாட்ட வர்த்தகர் தம்மிக்க பெரேரா உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் தம்மிக்க பெரேராவின் சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்கான வர்த்தமானி ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது.
தம்மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் தனது சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முன்வைக்கப்பட்டது.
தம்மிக்க பெரேராவின் நியமனத்தை சவால் செய்து, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அடிப்படை உரிமை மனு விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.
பெரேரா, அரசியலமைப்பின் 99A (தேசியப் பட்டியல்) உறுப்புரையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு நியமிக்கப்பட்டார். அரசியல் சாசனத்தின் 99A பிரிவின்படி, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட வேட்புமனுக்கள் அல்லது தேசியப் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, அத்தகைய வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஒரு நபர் பரிந்துரைக்கப்படுவார் என்று மாற்றுக் கொள்கை நிலையம் கூறியது.
அரசியலமைப்பின் 99A வின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொதுஜன பெரமுன சமர்ப்பித்த பட்டியலிலும் அல்லது 2020 பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு தேர்தல் மாவட்டத்தையும் பொறுத்தமட்டில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு வேட்புமனுவிலும் தம்மிக்க பெரேராவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.