ரஷ்யர்களிற்கான விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கி நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகிறது.
1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் சுதந்திரமடைந்தபோது தொடங்கிய ரஷ்யர்களுக்கான விசா இல்லாத நுழைவு இதன் மூலம் முடிவிற்கு வருகிறது.
இனிமேல் ரஷ்யர்கள் உக்ரைனுக்குள் நுழைவதற்கு விசா பெற வேண்டும்.
“ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களுக்கு உக்ரைன் விசா முறைமையை அறிமுகப்படுத்துகிறது. இது ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து அரசின் முடிவு “இன்று” வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பின் காரணமாக நாட்டின் தற்காப்பு முயற்சிகளை வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜெலன்ஸ்கியின் தலைமை அதிகாரியான Andriy Yermak கூறினார்.
“ரஷ்ய கூட்டமைப்பால் தொடங்கப்பட்ட முழு அளவிலான போர் காரணமாக, ரஷ்ய குடிமக்கள் எங்கள் எல்லைக்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டும். பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.
ரஷ்யாவும் உக்ரைனும் அண்டை நாடுகள். அவை கிட்டத்தட்ட 2,300 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளின் குடிமக்களும் விரிவான குடும்ப இணைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
கிரிமியன் தீபகற்பத்தை மாஸ்கோ 2014ல் இணைத்த பிறகு, உக்ரைனுக்குப் பயணம் செய்யும் ரஷ்யர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதை தொடர்ந்து, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுடன் உக்ரைன் போரில் ஈடுபட்டது.
2013 இல், 10.8 மில்லியன் ரஷ்யர்கள் உக்ரைனுக்கு விஜயம் செய்தனர். ஆனால் ஒரு வருடம் கழித்து அந்த எண்ணிக்கை 2.5 மில்லியனாகக் குறைந்தது. 2015 மற்றும் 2019 க்கு இடையில், இது மேலும் ஒரு வருடத்திற்கு 1.5 மில்லியனாகக் குறைந்தது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோவிட் தொற்றுநோய் பரவியதால், ரஷ்ய பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 500,000 ஐ தாண்டவில்லை.