இன்று சுயேட்சைக்குழுக்கள் முன்வைத்த முன்மொழிவுகள் மற்றும் வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட பல யோசனைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 21 வது திருத்தச் சட்டமூலம் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, 21வது திருத்தச் சட்டத்தை ஆய்வு செய்வதற்காக சட்டத்தரணிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
21வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய சரத்துகள் தொடர்பான யோசனைகளை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 21 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, ஸ்ரீநாத் பெரேரா மற்றும் திஸ்ஸ விஜேகுணவர்தன ஆகியோரைக் கொண்ட குழுவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் விளைவாக, உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்க முடியாது என்று தெரிவித்தார்.
உத்தேச 21வது திருத்தச் சட்டமூலத்தின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜே.வி.பி. புதிய வரைவுக்கான முன்மொழிவுகளை எதிர்வரும் வாரத்தில் சமர்பிப்பதற்கு தமது கட்சி நம்புவதாக கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமது கட்சி இணையாது எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.