6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்பு திட்டங்களைக் குறைத்து, இரண்டு வருட நிவாரண வரவு செலவு திட்டமாக சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரொய்ஸ்டர்ஸிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் போது பணவீக்கம் அதிகரிக்கும் என்றும், மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தலாம் என்றும் எச்சரித்தார்.
“எதிர்வரும் கடினமான நாட்களைப் பார்க்கும்போது, எதிர்ப்பு இருக்க வேண்டும். மக்கள் பாதிக்கப்படும்போது அது இயற்கையானது, அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
“ஆனால் அது அரசியல் அமைப்பை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
“இடைக்கால பட்ஜெட் செலவினங்களைக் குறைப்பது மட்டுமே” என்றார்.
“எங்களிடம் ரூபா வருமானம் இல்லை, இப்போது நாம் இன்னும் ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சிட வேண்டும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
வருடாந்த பணவீக்கம் வரும் மாதங்களில் 40% ஐ தாண்டும் என்று எச்சரித்தார்.
திங்களன்று வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, பணவீக்கம் மார்ச் மாதத்தில் 21.5% ஆக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 33.8% ஆக உயர்ந்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகளிற்கான பணத்தைத் தேட, நாட்டின் பரந்த அரசாங்கத் துறை முழுவதும் சாத்தியமான செலவினக் குறைப்புகளை மீளாய்வு செய்வதாக பிரதமர் கூறினார்.
“உதாரணமாக, சுகாதார அமைச்சு, அதன் செலவினங்களைக் குறைக்க முடியாது. கல்வி அமைச்சில் வரையறுக்கப்பட்ட குறைப்பையே மேற்கொள்ளலாம். ஆனால் நாம் குறைக்கக்கூடிய பல அமைச்சுக்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில், நாட்டிற்குள் புதிய முதலீடுகளை ஈர்க்கும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதே வேளையில், சர்வதேச கடன் வழங்குநரிடமிருந்து ஒரு “நிலையான கடன் பொதியை” தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் கூறினார்.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக,ஓகஸ்ட் மாதம் முதல் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாமென்பதால், நேச நாடுகள் மற்றும் பலதரப்பு முகவர்களிடமிருந்து வெளிநாட்டு உதவிகளைப் பெற்று பிரதான உணவுப் பொருட்களின் கையிருப்பை அதிகரித்து வருவதாக கூறினார்.
“எங்களுக்கு அதிக அரிசி தேவைப்படும். போதுமான உணவு இருப்பதை உறுதி செய்ய வெளிநாட்டில் உள்ள எங்கள் நண்பர்களிடமிருந்து சில உதவிகளைப் பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்,
பெய்ஜிங்கில் இருந்து உரம் மற்றும் மருந்துகளை கோரி அடுத்த வாரம் இலங்கைக்கான சீன தூதுவரை சந்திக்க உள்ளதாக பிரதமர் கூறினார்.
“கிடைப்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார், “எங்களுக்கு உரம் தேவை என்று எங்களுக்குத் தெரியும். நான் அதில் கவனம் செலுத்துகிறேன்.” என்றார்.