பவுசர் சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், முன்னறிவிப்பு இன்றி செயற்பாடுகளை இடைநிறுத்தப் போவதாக இலங்கை தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சாரதிகளின் பாதுகாப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் பெற்றுக்கொள்ளும் போது பொதுமக்களின் கட்டுக்கடங்காத செயற்பாடுகள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாக சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.
பவுசர் நடத்துனர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது கைத்தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயற்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் சில்வா மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக கருதி, தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு அவர்கள் தொடர்ந்தும் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக சாந்த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கட்டுக்கடங்காத கூட்டத்தை பாதுகாப்புப் படையினர் கட்டுப்படுத்தத் தவறினால், நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.