அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சிறிய சூறாவளி போன்ற பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பொதுமக்களின் வீடுகள். வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் உட்பட பல்வேறு கட்டிடங்களின் கூரைகள் பறந்துள்ளதுடன் மரங்களும் சரிந்து விழுந்துள்ளது.
மாலை 03 மணியளவில் இடம்பெற இந்த அனர்த்தம் காரணமாக கடுமையான சேதங்களை மக்கள் சந்தித்துள்ளனர். மத்தியமுகாம், இரண்டாம் வட்டாரம், மூன்றாம் வட்டாரம், சவளக்கடை, நான்காம் காலனி, ஆகிய இடங்களிலையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வீடுகளுக்கு முன்னால் நின்ற மரங்கள் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தமையினால் வீடுகளுக்கும் வீட்டின் கூரைகளுக்கும் பலத்த சேதம் உருவாகியுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியான மக்கள் வேறிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அரிசி ஆலைகளும், மேலும் பல வர்த்தக நிலையங்களும் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளமையினால் நிறைய நெல் மற்றும் அரிசி மூட்டைகள் மழையில் நனைந்து பாவனைக்கு உதவாத வகையில் மாறியுள்ளதையும், மக்களின் வாழ்வியல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
அதிகாரிகள் அவசரமாக நடவடிக்கை எடுத்து இது தொடர்பில் உரிய நஷ்டஈடுகளை பெற்றுத்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.