அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (24) இரவு இந்த சம்பவம் நடந்தது.
சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய குணரட்ணம் குணதாஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அயல் வீடுகளிலுள்ள இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நீண்டகாலமாக குடும்பத் தகராறு காணப்படும் நிலையில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 8.15 மணிக்கு இரு குடும்பத்திற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அதில் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது கோடாரியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய சந்தேகநபரை பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட கோடாரியுடன் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.