அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தருணம் வந்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ஜனாதிபதி பைடன், “எப்போது தான் நாம் அனைவருமே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்கப்போகிறோம்? இன்னும் சிலர் ‘துப்பாக்கி சுதந்திரத்தை’ ஆதரிக்கின்றனரே! துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு குடிமகனும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை இழப்பது பெற்றோருக்கு நீங்கா சோகம். நான் 1972இல் ஒரு விபத்தில் என் மனைவியையும், மகளையும் இழந்தேன். 2015இல் என் மகன் புற்றுநோயால் இறந்தார். ஒரு குழந்தையை இழப்பது ஆன்மாவின் ஒரு துண்டை பிய்த்து எடுப்பது போன்று வலி தரும். நெஞ்சில் ஒரு வெறுமை ஏற்படும். ஏதோ ஒன்று உங்களை முழுவதுமாக உரிஞ்சு கொள்வதுபோல் இருக்கும்” என்று கூறினார்.
அதேபோல் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், “நடந்தது எல்லாம் போதும். இதயம் நொறுங்கிவிட்டது. துணிந்து நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.