தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இடம்பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை பதவியை கைப்பற்ற ஒரு அணி அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட்டு, கட்சியை கைப்பற்றி விட்டதாகவும், வீ.ஆனந்தசங்கரி அங்கம் வகிக்காத புதிய நிர்வாகம் தெரிவு செய்துள்ளதாகவும் அறிவித்திருந்த நிலையில், இன்று வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கட்சியின் பொதுச்சபை கூட்டம் நடைபெற்றது.
ஆயினும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க ஊடகங்களிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இன்றைய கூட்டத்தில் சிரேஷ்ட தலைவராக சட்டத்தரணி ப.சிறிதரனும், செயலாளர் நாயகமாக மீண்டும் வீ ஆனந்தசங்கரியும் ஏகமனதாக தெரிவானார்கள்.
நிர்வாகச் செயலாளராக க. பூலோகரட்ணமும், பொருளாளராக தி.சஞ்சயனும், இணைப்பொருளாளராக வேதாரணியனும் தெரிவாகினர். இளைஞர் பேரவை தலைவராக க.சபேசனும், மகளிர் பேரவை தலைவராக சூரியபிரதீபா வாசவனும், சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவராக ஐயம்பிள்ளை யசோதரனும், தொழிற்சங்கத் தலைவராக சி.தயாபரனும் தெரிவாகியுள்ளனர்.
கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிடுகையில், நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் உதய சூரியன் உதிக்கவுள்ளது. சிறந்த கட்சி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் பிரகாசிக்க உள்ளது என தெரிவித்தார்.
கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிதரன் தெரிவிக்கையில்,
தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் கடந்த நாட்களாக இருந்த குழப்பகரமான நிலை மாற்றப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனாதாக புதியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி 1977ம் ஆண்டுகளில் கொண்ட கொள்கையில் பயணிக்கும். தனி நாடல்ல. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களிற்கான தனி அரசை பெற்று கொடுப்பதில் உறுதியுடன் செயற்படும் என அவர் தெரிவித்தார்.
மகளீர் பேரவை தலைவி கருத்து தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் நிர்வாக செயற்பாடுகளிற் பங்கெடுத்துள்ள நாம் எதிர்வரும் மே 18ம் திகதி தமிழர் விடுதலை கூட்டணி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய பின்னர் மக்களிற்கான அரசியல் பணியை முன்னெடுத்த செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்