புதிய அமைச்சரவை நாளை (18) கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
புதிய அமைச்சரவையில் 22 பேர் அங்கம் வகிப்பதாக தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவிவிலக வலியுறுத்தி மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து, மார்ச் 3 இரவு அமைச்சரவை இராஜினாமா செய்திருந்தது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தை தடையின்றி நடத்த ஏதுவாக தற்காலிக அமைச்சரவை, மறுநாள் நியமிக்கப்பட்டது.
இதேவேளை, நாளை பதவியேற்கவுள்ள புதிய அமைச்சரவையில் சுமார் பத்து முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அடங்குவார்கள்.
தற்போதைய அமைச்சரவை அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, அலி சப்ரி மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு மேலதிகமாக, முன்னாள் அமைச்சர்களான கலாநிதி ரமேஷ் பத்திரன, டக்ளஸ் தேவானந்தா மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, காஞ்சன விஜேசேகர, ரொஷான் ரணசிங்க, டி.வி.சானக்க, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், ஜானக வக்கும்புர மற்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டாம் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் நேற்றிரவு (16) ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலாநிதி பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, பிரசன்ன ரணதுங்க, எஸ்.எம்.சந்திரசேன, ஜனக பண்டார தென்னகோன், சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் இந்த அமைச்சுப் பதவி தேவையற்றது என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, புதிய அமைச்சரவை பதவிகளை ஏற்கப்போவதில்லை என டலஸ் அழகப்பெரும மற்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் இன்று (17) ருவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டிருந்தனர்.
அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு பேராசிரியர் சரித ஹேரத், பிரமித பண்டார தென்னகோன், திலான் பெரேரா, எஸ்.ஏ.டி.ஜகத் குமார உள்ளிட்ட பல இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.