தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டது. கடத்தலுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் காவல் சரகம், ஆறுகாட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து கஞ்சா மீட்கப்பட்டது.
படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா படத்தப்படவுள்ளதாக வேதாரண்யம் கடலோர காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், நேற்று (07) இரவு சுமார் 8.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
TN51 AH 2707 என்ற எண்ணுள்ள சுசுகி சூப்பர் கேரி டர்போ வாகனத்தை சோதனை செய்தபோது, ஆசனத்திற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 09 மூட்டை கஞ்சாவை கைப்பற்றினர்.
இதில் 260 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
வாகனத்தை ஓட்டி வந்த ஆறுகாட்டுத்துறை, சுனாமி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் தடுத்து வைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சுரேஷ் வழங்கிய தகவலில், மேற்படி கஞ்சாவானது ஆறுகாட்டுத்துறை வடக்குத் தெருவைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரிவித்ததன் பேரில் அவரையும் கைது செய்தனர்.
அத்துடன், சந்தேகத்திற்கிடமான விதத்தில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த துரைராஜா காந்தரூபன் என்பவரையும், அவருடைய சுசுகி சூப்பர் கேரி டர்போ என்ற வாகனத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.