தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஒரு கட்சியை வெளியேறுமாறு மற்றொரு கட்சியை சேர்ந்தவர்கள் கூறுவது பிழையான நடைமுறை. இதற்கு நிரந்தர தீர்வு காணும் நடைமுறையை விரைவில் உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் மகிழ்ச்சியடைவேன் என அண்மையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கண்டித்தார்.
இந்த நிலையில், இன்று (4) யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் நடந்த நிழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த த.சித்தார்த்தன்,
‘தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஒரு கட்சியை வெளியேறுமாறு மற்றொரு கட்சியை சேர்ந்தவர் கூறுவது தவறானது. அப்படி ஒருவர் கூறி மற்றொரு கட்சி வெளியேறாது. வெளியேற வேண்டிய அவசியமும் இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தவே நாம் முயற்சிக்கிறோம். கூட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.
கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சியை சேர்ந்தவர், இன்னொரு கட்சியை வெளியேறுமாறு இஷ்டம் போல கூறுவதற்கெல்லாம் இடமளிக்கக்கூடாது. விரைவில் கூட்டமைப்பின் தலைவர்கள் கூடி, இதற்கான நிரந்தர ஏற்பாடொன்றை செய்வோம்’ என்றார்.