தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமல்ல. அது ராஜபக்ஷக்கள் பாதுகாப்பு சட்டமென்பதை சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.
இன்று (2) கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்பொழுது அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமல்ல. அது ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் சட்டம்.
பொதுமக்கள் வீதிகளில் கூட முடியாது. பூங்காக்களில் கூட முடியாது. கடற்கரையில், பேருந்து நிலையத்தில் கூட முடியாதென கூறப்பட்டுள்ளது. கூட முடியாதென்ற நிலைமை யாருக்கு ஏற்பட்டுள்ளது?
மனோ கணேசனுக்கா? பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கா? பாக்கீர் மாரைக்காருக்கா? இல்லை. ராஜபக்சக்களிற்கு.
இன்று நடைபெறவிருந்த ரகர் போட்டியொன்றில், ராஜபக்ச ஒருவர் விளையாடுகிறார் என்பதற்காகவே இடமாற்றம் செய்துள்ளனர். பார்வையாளர்கள் அந்த ராஜபக்சவை பார்த்து ‘ஊ’ சத்தமிடுவார்கள் என பயப்பிடுகிறார்கள்.
சில நாட்களின் முன் நுவரெலியா பூங்காவில் பிரபல பெண்மணியை மக்கள் விரட்டியடித்தார்கள். நாம் கவலையடைகிறோம். இந்த நிலைமையை நோக்கி அந்த குடும்பம் போனதை நினைத்து நாம் வேதனையடைய மட்டும்தான் முடியும்.
மக்களின் ஏகோபித்த வேண்டுகோள், இலங்கையர்களான எமது வேண்டுகோள்,போய் விடுங்கள். சென்று விடுங்கள்.
நாளை மக்கள் தன்னெழுச்சியாக நடத்தவுள்ள போராட்டங்களை பார்த்து அரசாங்கம் அச்சமடைகிறது. இது ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் அதை வாழ்த்துகிறோம்.
நாளை தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஒரு பேரணி ஏற்பாடு செய்திருந்தோம். ஊரடங்கு காரணமாக அதை இடைநிறுத்தியுள்ளோம். ஆனால் கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடவுள்ளோம்.
மக்கள் ஊரடங்கு சட்டத்தையும், அவசரகால சட்டத்தையும் நிராகரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. சட்டத்தை மீறச்சொல்லவில்லை. ஆனால் சட்டம் கொண்டு வருவதற்கு நியாயம் இருக்க வேண்டும். தர்க்கம் இருக்க வேண்டும். அது இல்லை.
இது ராஜபக்ஷ குடும்பம் தன்னை பாதுகாக்க கொண்டு வந்த சட்டம். இதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.