25 வயது இளம் பெண்ணை மணந்ததால் சமூக வலைதளங்களில் பிரபலமான 50 வயது சங்கரப்பா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் அக்கிமரிபால்யம் கிராமத்தை சேர்ந்த 50 வயதான சங்கரப்பா , கடந்தாண்டு அக்டோபர் மாதம் அதே பகுதியை சேர்ந்த மேகனா என்ற 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அப்போது வைரலாகியதால் ஒரே நாளில் பிரபலமானார் சங்கரப்பா.
திருமணம் முடிந்த கையோடு சங்கரப்பா தனது இளம் மனைவி மேகனாவின் விருப்பத்திற்கு ஏற்ப இன்ஸ்டாகிராமில் காதல் டூயட்டுக்கு நடந்தும் ஆடியும் வீடியோ பதிவிட்டு, திருமணமாகாத இளைஞர்களின் சாபத்திற்கு உள்ளாகி வந்தார்.
திருமணம் முடிந்து ஆறு மாதம் கடந்த நிலையில் நாய் வளர்க்கும் விவகாரத்தில் தனது தாய்க்கு ஆதரவாக பேசியதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கரப்பாவாவை , மனைவி மேகனா கடும் சொற்களால் பேசியதால் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை மீண்டும்தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மனைவியின் உக்கிரத்தால் மனமுடைந்த சங்கரப்பா வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போனதாக கூறப்படுகின்றது.
மனைவி மேகனாவும் உறவினர்களும் சங்கரப்பாவை தேடி வந்தனர் . இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பலா மரத்தில் சங்கரப்பா தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டார்.
தகவல் அறிந்து அங்கு ஓடிச்சென்ற மனைவி மேகனா சங்கரப்பாவின் சடலத்துக்கு அடியில் அமர்ந்து கதறி அழுதார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேகனா தனது மகனுடன் சில நாட்களாக தகராறு செய்ததாக சங்கரப்பாவின் தாய் ரங்கம்மா ஹுலியூர்துர்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சங்கரப்பாவின் மனைவி மேகனாவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஹூலியூர்துர்கா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கரப்பாவின் சடலத்திற்கு அருகில், அவர் எழுதியதாக நம்பப்படும் தற்கொலை குறிப்பொன்றும் மீட்கப்பட்டது.