சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, ஷெஹான் மாலக கமகே 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
இது ஒரு அரசியல் சதி என்று கூறிய கமகே, இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த ஆண்டு இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் முன்மொழியப்பட்ட கறுப்புக் கொடி பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதிலும் ஷெஹான் மாலக கமகே முக்கிய பங்காற்றினார்.
தாக்குதல்கள் குறித்த அவரது கருத்துக்கள் குறித்து ஓகஸ்ட் 2021 இல், அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டார்.
ஷெஹான் மாலக கமகே இன்று கைது செய்யப்பட்ட போதிலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான சரியான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.